இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.
அடடா...
ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...
தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...
நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர் அணுகியிருக்கலாம். ஆனாலும், எனக்கு தோன்றியதை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
2. வேளாண்மை பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் பயன், விவசாயியை சென்றடைய வேண்டும்.
3. பல்வேறு பணப்பயிர் (மூலிகை, ஆமணக்கு மற்றும் பிற ஏற்றுமதிக்கு உரிய பயிர்கள்) பற்றிய விவரங்கள் கிடைக்க வேண்டும்.
4. கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
5. ஒருங்கிணைந்த ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்
6. ஆண்டு முழுவதும் வருமானம் வரும்படி, ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகளில் அறிவியல் கலந்த, அதிகம் பலன் தரக் கூடிய முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, சோதனை முறையில் செயல் படுத்தி, சாதனையாக்க வேண்டும்.
இதன் முன்னோட்டமாக, வரும் ஜுலை மாதம், முதன் முறையாக, வயல் (தோப்பு/காடு) வாங்குவதற்கு தயாராகி வருகிறேன்.
இங்கு, அமெரிக்காவில், அனைத்துமே நடைமுறையில் உள்ளது.
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...
ம்ம்... அது அவ்வளவு சுலபமா? இது என்ன ரஜினி படமா? ஒரு பாட்டு முடியற நேரத்துல சாதிக்கிறதுக்கு...
ஆனா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுதே... முடியும்னு...
ஈ.வே.இராமசாமி என்ற ஒரு தனி மனிதனின் மனதில், இந்த சமுதாய பொய்மைகளை கண்டு உருவான ஒரு தீப்பொரி தானே நமக்கு தந்தை பெரியாரை அடையாளம் காட்டியது, மூட நம்பிக்கைகளை சுட்டு பொசுக்கியது,
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமும், அதனை தொடர்ந்து எழுந்த விடுதலை வேட்கையும், நமக்கு உலகமே கொண்டாடும் மாகாத்மா காந்தியை அடையாளம் காட்டியது. அஹிம்சையின் வலிமையை எடுத்து சொன்னது...
இதோ... இங்கு நான் மட்டும் இல்லை... இதை படிக்கும், நீங்களும் இணையும் போது, ஏன் முடியாது?
Posted by செந்தில்நாதன் செல்லம்மாள்
No comments:
Post a Comment